இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வானது "புதிய தேசம் அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் 04.02.2024 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.





இதன் போது தேசியக் கொடி பிரதேச செயலாளரால் ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதினை தொடர்ந்து மூலிகைப்பயிர்கள் மற்றும் மரக்கன்றுகள்என்பன நடப்பட்டது.



இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் சகலஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழாவானது 23.01.2024 ம் திகதி பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.






பிரதேச செயலக இராஜ கணபதி ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வுடன் பொங்கல் நிகழ்வானதுமிக விமர்சையாக ஆரம்பமானது. இதில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பல்வேறு கிளைகளினால் 9 பொங்கல் பானைகள் வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.






அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டது.இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.






மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் 01.01.2024 காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கமைவாக(25/2023) சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.




அதனை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டு பதவியணி நலன்புரிச் சங்கத்தினால் பால்ச்சோறும் வழங்கப்பட்டு இப்புது வருட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.



சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் 2022/2023 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.01.2024) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிரணவ ஜோதி மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.





இதன்போது 47 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கிரிக்கெட் அணி, ஆண்களுக்கான கராத்தேப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றியீட்டிய ஆர்.துஷ்யந்தன், பெண்களுக்கான தைக்வொண்டா 73 kg நிறைப் பிரிவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட எஸ்.நிலுக்ஷகா, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த எவ்.டியான் ஸ்ரித், எவ்.டியான் பிறிடோ மற்றும் ஐ.கெல்வின் கிசோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய மூத்தோருக்கான மெய்வல்லுனர் போட்டியில் 55- 59 வயதுப் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி மூன்றாம் இடத்தைப் பெற்ற மாவட்டப் பயிற்றுவிப்பாளர் பி.ஜெயக்குமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.





அத்தோடு இச்சாதனைகள் படைக்க பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களும் கௌரவம் பெற்றனர். அந்த வகையில் பயிற்சியாளர்களான கிரிக்கெட்- ரி.பிரசாத் மற்றும் அ.சிவகுமார், கராத்தே- எச்.ஆர்.சில்வா, தைக்கொண்டா- கௌசிகன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் கௌரவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






















