தேசிய சிறுவர் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறுவர்களின் கலையார்வ செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அருண தக்கின ரட்ட எனும் முன்பள்ளி சிறார்களுக்கான சித்திரப் போட்டி இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
சிறுவர் செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் முன்பள்ளி சிறார்களுக்கான சித்திரப் போட்டியானது இவ்வருடமும் மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டு அம்முன்பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான சித்திரப் போட்டி கட்டங்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
இந்த வகையில் இன்று இடம்பெற்ற சித்திரப் போட்டியில் 50 க்கும் மேற்பட்ட முன்பள்ளிச் சிறார்கள் கலந்துகொண்டிருந்தனர். மண்முனை வடக்குப் பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்கள் கலந்துகொண்டு சித்திரப் போட்டியில் பங்குபற்றிய முன்பள்ளிச் சிறார்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.T.றஜனிகாந், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி S.ஊர்மிளா, நிவாரண சகோதரி செல்வி R.விஜயமாலினி, உளவள ஆலோசகர் திருமதி R.லூசியா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி N.புவனலோஜினி ஆகியோருடன் முன்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






















